திருக்குறள்

02/04/2014

ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே 2 கடைசி தேதி

மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.-2014) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனங்கள் (ஆர்.ஐ.இ.) சார்பில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆஜ்மிர், போபால், புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங் ஆகிய 5 இடங்களில் மத்திய கல்வியியல் நிறுவனம் அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்விக்கான மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) கீழ் இந்தக் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்த 5 கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். படிப்பு வழங்கப்படுகிறது. பிசிக்கல் சயின்ஸ், பயோலஜிக்கல் சயின்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

இந்தப் படிப்பை முடிப்பவர்கள் கேந்திரிய வித்யா பவன், தில்லி பப்ளிக் பள்ளி உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளிலும், மாநில அரசுப் பள்ளிகளிலும் அறிவியல் ஆரிசிரியர்களாக பணியில் சேர முடியும். மேலும், எம்.எஸ்சி. மற்றும் எம்.எட். படிப்புகளையும் மேற்கொள்ள முடியும். பிளஸ்-2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள் இந்தப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பிளஸ்-2 தேர்வை முடித்தவர்களும், 2014-ல் பொதுத் தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் லட்சத் தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மைசூரில் உள்ள ஆர்.ஐ.இ. கல்வி நிறுவனத்தில் மட்டுமே படிப்பில் சேர முடியும்.

இங்கு இந்த படிப்புகளில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. நுழைவுத் தேர்வு மே 31-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலமும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பத்தைப் பெற ஏப்ரல் 25 கடைசி தேதியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 2 கடைசி தேதி. நுழைவுத் தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். சேர்க்கை ஜூலை 7-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களை www.rieajmer.ac.in, www.ncert.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment