திருக்குறள்

30/01/2014

ஜனவரி 30: காந்தி நினைவு நாள் - சிறப்பு பகிர்வு

இன்றைக்கு காந்தியின் நினைவு நாள். அவரைக்கொன்ற கோட்சே இங்கே பலருக்கு நாயகன் ! ஜெர்மனியில் ஹிட்லர் பற்றி பேசினால் ஒரு அருவருப்பான பார்வை கண்டிப்பாக கிடைக்கும். நம்மூரில்தான் கோட்சே ஒரு ஈடில்லாத நாயகன் போல கொண்டாடப்படுகிறான்.
காந்தி மதத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியலை கட்டமைத்தார் என்பது பொதுவாக சொல்லப்படுகிற கருத்து, அதே சமயம் ஒரு கேள்வியை பலபேர் எழுப்பிக்கொள்வதே இல்லை. காந்தியை ஏன் அப்புறம் மூன்று முறை மதவாத சக்திகள் கொல்ல முயற்சி செய்தார்கள் ? காந்தியை இந்து மத துரோகி என்றும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் ? கோயில் நுழைவு போராட்டங்களை ஏன் சங்கராச்சாரியார் முதலியோரின் எதிர்ப்புகளை மீறி அவரும், அவரின் தொண்டர்களும் முன்னெடுத்தார்கள் ?
‘என் ராமன் அயோத்தி ராமனில்லை ‘ என்று உறுதியாக காந்தியால் சொல்ல முடிந்தது. கோயில்கள் விபச்சார விடுதிகளாக இருக்கின்றன என்று வன்மையாக கண்டிக்கிற பண்பு அவரிடம் இருந்தது. கோயில்களுக்கு போவதை பெரும்பாலும் தவிர்த்தே இருந்திருக்கிறார் அவர் ; மத ஆச்சாரியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார் அவர். மதத்துக்குள் இருந்து வெறுப்பரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு
எல்லா மதத்தின் நல்ல பண்புகளை இணைத்துக்கொண்டு நகரவேண்டும் என்ற காந்தி அகில பாரத சாஹித்ய பரிஷத் கூட்டத்தில் விடுதலைக்கு பதினாறு ஆண்டுகள் முன்னர் பேசியதை குறிப்பிடலாம். "நான் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆனால் வெறுப்பை விதைக்கிற வகுப்புவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுகிற எல்லா வகையான எழுத்துகள் மற்றும் பேச்சுகளை தடைசெய்வேன் !" என்று காந்தி பேசினார். பெரும்பான்மையினரின் தீவிரவாதம் அவர்களுக்கு அதிகாரத்தையும்,போதையையும் தருகிறது என்று குறித்து அதை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று செயலாற்றினார் அவர்.
அதேசமயம் சிறுபான்மையினரின் மதவாதத்தை பற்றிய புரிதலும் அவருக்கு இருக்கவே செய்தது. "இந்துக்கள் மற்ற மதத்தவரை கொல்வதை செய்வார்கள் என்றால் அவர்கள் இந்து தர்மத்தை  கொன்றவர்கள் ; அதே போல மற்ற மதத்தவர் மீது வன்முறையை கைக்கொள்ளும் இஸ்லாமியர்களும் இஸ்லாமுக்கு எதிரானவர்களே !" என்று காந்தி பதிவு செய்தார். ஜின்னாவின் மதவெறி அரசியல் இஸ்லாமியமற்றது என்றும் சாடினார் அவர்.
இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியக்கூடாது என்று அழுத்தி சொன்ன காந்தியே வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கை, ஜின்னாவின் மதவாத அரசியல், காங்கிரஸ் மதவாதத்தை எதிர்கொள்வதில் காட்டிய அசட்டை,கட்சிக்குள்ளேயே இருந்த வலதுசாரிகள்,பதவி கிடைத்தால் போதும் என நகர்ந்த தலைவர்கள் என்று எல்லாமும் சேர்ந்து நிற்க நாட்டை பிரிக்க ஒத்துக்கொண்டார். வன்முறைகள் பெருமளவில் வெடிக்கும் ஒரே தாயின் கருவுக்குள் பிள்ளைகள் வெட்டிக்கொண்டு
சாவதை போல இங்கே மரணங்கள் நிகழும் என்று எச்சரித்தார்.
காந்தியின் வித்தியாசமான ஆளுமையையோ ; அவரின் அடிப்படை நேர்மையையோ, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மையையோ சந்தேகிக்க முடியாது. காந்தி ஒரு பழமைவாதியுமல்ல, முற்போக்குவாதியுமல்ல. தன்னளவில் பல முரண்களைக் கொண்டவர் என்றாலும், விடாப்பிடியாகப் பழமையைப் பேணவோ, புதுமையைக் காக்கவோ முனையும் அளவுக்கு அரை குறையானவரோ, தன்னிலிருந்து அந்நியப்பட்ட மனிதரோ அல்ல என்று நந்தி சொல்கிற அளவுக்கு வெறுப்பை உண்டு செய்யும் போக்கை காந்தி தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரித்தார். ‘காந்தி இருக்கும் வரை ஹிந்து தேசம்
சாத்தியமில்லை, இருப்பதும் இஸ்லாமியர்களுக்கு போய் விடும் என்று நம்பியது ஆர்.எஸ்.எஸ். முதலிய ஹிந்து மதவாத அமைப்புகள்.
இஸ்லாமியர்களையும் மதித்து நடக்க வேண்டும் ,அவர்களை கொல்லாதீர்கள் என்று ஹிந்துக்களை நோக்கி காந்தி சொன்னார். "ஏன் இதையே முஸ்லீம்களை நோக்கி சொல்லக்கூடாது?" என்று கேட்டார்கள் ஹிந்து மதவாதிகள். காந்தி வேறு மாதிரி நினைத்தார் ."சிறுபான்மையினரின் பயம் தாங்கள் சார்ந்திருக்கும் நாட்டில் சிறுபான்மை என்று உணர வைக்கப்படுகிற பொழுது எழுகிறது ; அவர்கள் அவ்வாறு உணர்கிற பொழுது இது தாங்கள் கனவு கண்ட தேசமில்லை என்று எண்ணுவார்கள் !" என்று அவர்களின் வலியை உணர்ந்தவராக பேசினார்.
”வெறுப்புக்கு வெறுப்பு தீர்வு கிடையாது. எல்லாரும் கண்ணுக்கு கண் என்று நகர்ந்தால் எல்லாரும் குருடாகத்தான் வேண்டும். ” சிறுபான்மையினர் இப்படி இயங்குவதன் பின்னர் இருக்கும் வெறுப்பை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது; பெரும்பான்மையினரை மிருகமாக்கும் இதை தேசியம் என்று சொல்லும் குழுவை நோக்கி வேகமாக எதிர்த்து இயங்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
வங்கம்,பீகார்,டெல்லி என்று எங்கெல்லாம் வன்முறைகள் வெடித்தனவோ அங்கெல்லாம் வெறுங்காலோடு ஒரே ஒரு ஜீவன் அமைதிக்காக நடந்தது. மதவாதத்தை எதிர்த்து பிரார்த்தனை செய்யுங்கள், அமைதி காத்திருங்கள் என்று மட்டும் சொல்லி ஒரு மனிதனால் அமைதியை மீட்க முடிந்தது என்பது இன்றைக்கு ஆச்சரியம் தரலாம். ஐம்பத்தைந்து ஆயிரம் ராணுவத்தால் கொண்டுவர முடியாத அமைதியை காந்தி கொண்டு வந்தார் என்று சிலாகித்தார்கள் ஆங்கிலேயர்கள் !
“டெல்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளின் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ் இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை.. ” என்று காந்தி சொன்ன பொழுது இடைமறித்து ஒருவர் சொன்னார்:  ‘ (ஆனால்) ‘வா’வில் உள்ள அகதி முகாமில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கு, தைரியம், கடும் பணி செய்யும் திறன் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.’ இதற்குக் காந்தி, ‘ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். ஹிட்லரின் நாசிகளும், முசோலினியின் பாசிஸ்டுகளும் கூடத்தான் இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘எதேச்சதிகாரப் பார்வை கொண்ட வகுப்புவாத அமைப்பு’ என ஆர். எஸ். எஸ்சை அவர் வரையறுத்தார்.”
பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி தரவேண்டும் என்றும், கலவரங்கள் டெல்லியில் ஓய வேண்டும் என்றும் காந்தி இறுதி உண்ணாவிரதம் இருந்தது ,”காந்தி செத்து மடியட்டும் !” என்று கோஷம் எழுப்புகிற அளவுக்கு வெறுப்பாக மாறி இருந்தது. காந்தியின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கி நிற்கிறது என்று காந்திக்கு தெரியும் ; இப்படி பேசுவதற்காக, இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நம்பி இந்தியா வந்திருக்கும் எண்ணற்ற இஸ்லாமியர்களை காக்க தான் கொடுக்கும் குரல் தன் மூச்சை நிறுத்திவிடும் என்று அவருக்கு தெரிந்தே இருந்தது. “போய்விட்டு போகிறது ! நான் நம்பும் இறைவன் என் பணி முடிந்தது என்று எண்ணிக்கொண்டால் என்னை அழைத்துக்கொள்வான்” என்று அம்புஜம் அம்மாளுக்கு கடிதம் எழுதினார்.
பலபேர் ஏவப்பட்டு இறுதியில் கோட்சே கையால் அது நிகழ்ந்தது. கையில் இஸ்லாமியரின் பெயரை பச்சை குத்தி வன்முறையை தூண்டி நாட்டை ரத்த பூமியாக்க எண்ணிய அந்த மிருகத்தைதான் இங்கே நாயகனாக கொண்டாடுகிறார்கள் பலபேர். அப்பொழுது “காந்தியை கொன்றது ஒரு ஹிந்து !” என்று அழுத்தி சொன்னது ஊடகங்கள். இருந்தாலும் கோட்சேவை அப்படியே நாராயண் ஆப்தேவோடு தூக்கில் போடவில்லை அரசு. ஒழுங்காக வழக்கு விசாரணைகள் நடந்து, அவர்களுக்கு என்று வக்கீல் அமர்த்தப்பட்டு, ஜனாதிபதி வரை கருணை மனு போய் பின்னரே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
காந்தி இறந்ததும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து கொண்டாடிக்கொண்டார்கள் சங் பரிவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலேயே இருந்த கோட்சே அப்பொழுது தான் அதில் உறுப்பினரில்லை என்றுசொன்னது உடனிருந்தவர்களை காப்பாற்றவே. காந்தியை கொல்ல திட்டம் தீட்டிக்கொடுத்த சவார்க்கரின் படத்தை பி ஜே பி அரசு நாடாளுமன்றத்தில் வைத்தது ; இந்த கண் கொள்ளா கட்சி வேறு எந்த நாட்டிலும் நிகழாது.
உங்களுக்கு காந்தியோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால், மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் வெறுப்பரசியலை தணிக்க அயராது செயலாற்றிய அவரை அந்த ஒரு புள்ளியில் நீங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்ள முடியும். பெரியார் அதனால் தான் காந்திஸ்தான் என்று இந்தியாவுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று எழுதினார்.
பாகிஸ்தானில் ஹிந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதன் வலியோடு இங்கே சிக்கல்களை அணுகிய படேல் மற்றும் இஸ்லாமியர்களை இந்தியர்கள் என்று பார்க்க வேண்டும் என்ற நேரு ஆகிய இருவரையும் காந்தியின் மரணம்
உலுக்கியது. எவ்வளவு ஆபத்தானவர்கள் இந்து மதவாதிகள் என்று உணர்ந்தார்கள். இந்தியா இந்து தேசமாகாமல் தப்பியது !
நேரு காந்தியின் அந்த பன்முகத்தன்மையை முன்னோக்கி எடுத்து சென்றார். தேசம் எல்லா மக்களுக்குமான தேசமாக மாறியது. காந்தியார் சாந்தியடைய மதவாதத்தை புறக்கணிக்க வேண்டியது அவசியம் ; வெறுப்பை தாண்டி மனிதத்தை நோக்கி நம்மை செலுத்த வேண்டியது முக்கியம். அடையாள அரசியல்களை தாண்டி நம்மின் பன்முகத்தன்மையை காக்க ஒன்றிணைந்து நகரவேண்டும். ஆர்.எஸ்.எஸ் மாதிரியான அமைப்புகள், இந்தியாவை ஜனநாயகத்தின் மூலமே மீண்டும் வெறுப்பை தூண்டச் செய்யலாம் என்று வேகமாக செயலாற்றிக்கொண்டு இருக்கும் இக்காலத்தில், காந்தி இன்றைய சூழலில் அதிகம் அவசியமாக இருக்கிறார்.

No comments:

Post a Comment